ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகளான கவிதா, நிஜாமாபாத் மேலவை உறுப்பினராக உள்ளார். இவர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மெட்சல் மாவட்டம், முசீராபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெலங்கானா ராஷ்டிர சேனா எனும் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக கவிதா அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தெலங்கானா மாநிலம் உருவாக பல கஷ்டங்களை சந்தித்தோம். தற்போது மாநிலத்தை காப்பாற்றிக் கொள்ள ஒற்றுமையுடன் நாம் போராடும் நேரம் வந்துள்ளது. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா போராட்ட ரதம் திசை மாறி பயணிக்கிறது. பிஆர்எஸ் கட்சி மக்களின் தேவைகளை அறியவில்லை. புதிய மாநிலத்தில் நடக்க வேண்டிய பணிகள் இன்னமும் சரிவர நடைபெறவில்லை. விவசாயிகள் பிரச்சினை தீரவில்லை. நாம் நினைத்த தெலங்கானா இன்னமும் வரவில்லை. அன்று ஆட்சி செய்த குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினர்தான். இதற்காக தெலங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
அந்த தவறை சீர் செய்யத்தான் தற்போது அங்கிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கி உள்ளேன். அப்போதைய சந்திரசேகர ராவ் வேறு. இப்போதுள்ள சந்திரசேகர ராவ் வேறு. நரிகள், ஓநாய்களின் பிடியில் அவர் சிக்கி உள்ளார். மக்கள் தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியுடன் இணைந்து தெலங்கானா வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.இவ்வாறு கவிதா பேசினார்.