புதுடெல்லி: தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பது என்பது தேசத்தின் பொறுப்பாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மங்கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நீட் வினாத்தாள் கசிவு குறித்தும், அதை தடுப்பதற்கான வழிகள் குறித்தும் விளக்கி உள்ளார். இந்த கூட்டத்தில், கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வினாத்தாள் கசிவு மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டிவிடாமல், நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுத்தல் தேசத்தின் பொறுப்பாகும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் வலியுறுத்தினார்.
குறைபாடுகளே இல்லாத, வினாத்தாள் கசிவு நடைபெறாத வகையில் ஒரு தேர்வு முறையை உருவாக்க கூட்டு முயற்சிகள் தேவை, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆதரிப்பதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டிய கூட்டுப் பொறுப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என்றும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.