கோப்புப்படம்
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அடுத்த தலைமுறை செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் கடந்த 24-ம் தேதி நடத்தப்பட்டது.
அப்போது உந்துவிசை 175 டன் அளவில் நிலையாக செயல்படுவது நிருபிக்கப்பட்டது. இது 88 சதவீத முன்னேற்றமாகும்.
இந்த வெற்றிகரமான சோதனை, இதற்கு முன் 47 சதவீதம் மற்றும் 60 சதவீத உந்துவிசை அளவுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த சமீபத்திய சாதனை 200 டன் முழு - உந்துவிசை சோதனையை நோக்கி முன்னேறுவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.
2,000-கிலோ நியூட்டன் திறன் கொண்ட எஸ்.இ.2000 இன்ஜின் மூலம், ராக்கெட்டில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல முடியும். இந்த இன்ஜினுக்கு எரிபொருளாக திரவ ஆக்சிஜன் மற்றும் அதிசுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.