ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே
புதுடெல்லி: இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்ற அவர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் கூறியதாவது: “ஈரான் அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற ஒரு பொய்யின் அடிப்படையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. ‘கிரேட்டர் இஸ்ரேல்’ என்ற போலி பிம்பத்தை கட்டமைக்கவே இந்த போர் நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கவில்லை. இந்தியாவுக்கு வரும் கப்பல்களை நாங்கள் மறிக்கவில்லை. ஈரான் தனது பொறுப்புகளை நன்கு அறியும். அந்த வகையில் ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மையை செம்மைப்படுத்தும் நங்கூரமாக ஈரான் செயல்படுகிறது.
இப்படி இருக்கும் சூழலில் இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்க வேண்டும். ஏனெனில், அமெரிக்காதான் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என்று சயீத் கதிப்சாதே தெரிவித்தார்.
கொச்சியில் ஈரான் கப்பல்: மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரான் போர்க்கப்பல் ஒன்றுக்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது.
இலங்கை அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தகர்க்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே, மற்றொரு ஈரான் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் லாவன்’ கொச்சி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இப்பகுதிக்கு வந்திருந்த இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பிப்ரவரி 28 அன்று ஈரான் தரப்பிலிருந்து அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மார்ச் 4 அன்று அந்தக் கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது 'ஐஆர்ஐஎஸ் லாவன்' கப்பலில் இருந்த 183 ஈரான் கடற்படை வீரர்கள் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.