இந்தியா

போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தவறான ஊசியால் குழந்தை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் யாதவ். இவரது 3 வயது மகன் சர்தக் யாதவ் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிகிச்சைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி குழந்தையை போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சித்தார்த் யாதவ் சேர்த்தார். குழந்தை சர்தக் சிகிச்சை பெறும் வார்டில் பணியில் இருந்த செவிலியர் அனுகா, பார்மலின் ரசாயனத்தை ஓர் ஊசியில் ஏற்றி வைத்திருந்தார். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்க இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் 17ம் தேதி பணியில் இருந்த செவிலியர் மது பாலா சர்மா, பார்மலின் ரசாயனம் இருந்த ஊசியை குழந்தைக்கு செலுத்தினார். ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை சர்தக்கின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சித்தார்த் யாதவ் புகாரின் அடிப்படையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் செவிலியர்கள் அனுகா, மதுபாலா சர்மா ஆகியோர் பணியில் அலட்சியமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு செவிலியர்கள் மீது போபால் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் போபால் எய்ம்ஸ் நிர்வாகம் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT