விசாகப்பட்டினம்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது.
சீன கடற்படைக்கு நிகராக இந்திய கடற்படையில் போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதன்படி 40 நாட்களுக்கு ஒரு முறை இந்தியக் கடற்படையில் புதிதாக ஒரு போர்க் கப்பல் சேர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.45,000 கோடி செலவில் இந்தியக் கடற்படைக்காக 7 போர்க் கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ‘புராஜெக்ட் 17ஏ’ என்று பெயரிடப்பட்டது. மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (எம்டிஎஸ்எல்), கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர்க் கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. முதல் போர்க் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில் கடற்படையில் இணைந்தது.
இந்த வரிசையில் 6-வது போர்க் கப்பலாக ஐஎன்எஸ் மகேந்திர கிரி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தப் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (எம்டிஎஸ்எல்) நிறுவனம் ஐஎன்எஸ் மகேந்திரகிரியை வடிவமைத்து உள்ளது. இதன் நீளம் 149 மீட்டர், எடை 6,670 டன் ஆகும். இது மணிக்கு 52 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்த போர்க்கப்பலில் மூத்த அதிகாரிகள், மாலுமிகள் உட்பட 230 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
ராஜ்நாத் சிங் பாராட்டு
இவ்விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: எந்தவொரு நாட்டுக்கும் திறமையான மற்றும் உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய கடற்படை எவ்வளவு அவசியம் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை நமக்கு காட்டியுள்ளன.
மேற்காசியாவில் போர் தொடங்கிய பிறகு, இந்திய கடற்படை ‘ஆபரேஷன் ஊர்ஜா சுரக் ஷா’ மூலம் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 18 வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்து அவற்றை வழிநடத்தியது. இது, நமது கடற்படை வெறும் போர்ப்படையாக மட்டுமின்றி, இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு வலுவான பாதுகாவலனாகவும் விளங்குவதை காட்டுகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.