கோப்புப்படம்
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அதிபர் டொனல்டு ட்ரம்ப் நாடு கடத்தி வருகிறார். அதன்படி இந்தியர்களும் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எனினும், அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது குறித்து சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை விட சவுதி அரேபியா அதிக இந்தியக் குடிமக்களை நாடு கடத்தியுள்ளது. இதில், விசா காலாவதி மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்கள் அடங்கும்.
உண்மையில், பல வெளிநாட்டு அரசுகள் தடுப்புக்காவல் தரவுகளைப் பகிர்வதில்லை. இருப்பினும், அவசர கால விசாக்களின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் வெளியாகி விடுகின்றன.
அமெரிக்காவில் கடுமையான குடியேற்றச் சட்டங்கள் அறிவித்த போதிலும், அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியக் குடிமக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்களிடமிருந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் பெறப்பட்ட தரவுகளின்படி, அமெரிக்க தூதரகங்களான சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், அட்லாண்டா, ஹூஸ்டன், சிகாகோ ஆகியவற்றின்படி, இந்தியர்கள் வெளியேற்றப்படுவது பெரும்பாலும் இரண்டு இலக்கங்களில் அல்லது ஒரு சில நூறு எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன, இது வளைகுடா நாடுகளின் புள்ளிவிவரங்களை விட மிகக் குறைவு.
இந்தியர்களின் வெளியேற்றங்கள் பெரும்பாலும், விசா காலாவதியான பிறகு தங்குவது, பணி அனுமதி இல்லாமல் வேலை செய்வது, உரிமையாளர்களிடமிருந்து தப்பி ஓடுவது, உள்ளூர் தொழிலாளர் சட்டங்களை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இந்தியர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இருப்பதால், அவசரகால விசாக்களின் தேவை குறைந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் கீர்த்தி சிங் பதிலின் இணைப்பில் சில புள்ளி விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 2021-ல் 8,887, 2022-ல் 10,277, 2023-ல் 11,486, 2024 -ல் 9,206 மற்றும் 2025 -ல் இதுவரை 7,019 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புள்ளிவிவரத்தின்படி, 2021-ல் 805, 2022-ல் 862, 2023-ல் 617, 2024 -ல் 1,368 மற்றும் 2025 -ல் 3,414 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.