அகமதாபாத்: ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து புறப்பட்ட இந்திய காஸ் டேங்கர் கப்பல் ஷிவாலிக் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்கள் போராக மாறியது. இதனால் ஈரானின் எச்சரிக்கையால் கச்சா எண்ணெய் மற்றும் காஸ் டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் முடங்கிக் கிடந்தன. இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடினார். இதையடுத்து, இந்திய கப்பல்களை விடுவிக்க ஈரான் அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமான, இந்தியக் கொடி ஏந்திய ஷிவாலிக் என்ற காஸ் (எல்பிஜி) டேங்கர் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்த பிறகு நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.
இரண்டாவது டேங்கர் கப்பலான நந்தா தேவி, இன்று மும்பை துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியப் போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டேங்கர் கப்பல்கள் இவை. சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயைச் சுமந்தபடி லைபீரியக் கொடி ஏந்திய கப்பல்தான் முதலில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுற மும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேலும் 24 இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்தியா பணியாற்றி வருகிறது. ஓமனில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு பெட்ரோல் ஏற்றிச் செல்லும் ஜக் பிரகாஷ் என்ற 4-வது இந்தியக் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப்பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார்.