பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வுகளை இந்தியா வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் நடத்தப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வளரும் நாடுகளில் கரியமில வாயு உமிழ்வு சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் கூறி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது வளர்ந்த நாடுகளில் வெளியிடப்படும் கரியமில வாயு உமிழ்வு சதவீதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது. சர்வதேச அரங்கில் இந்த உண்மையை புள்ளிவிவர ஆதாரங்களுடன் நிரூபித்து வருகிறோம்.
கடந்த 2015-ம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்றது. அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க 21 அம்ச திட்டங்களை நிறைவேற்ற உறுதி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா மட்டுமே இந்த 21 திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட் ஆக இருந்தது. தற்போது 160 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சார்பில் சர்வதேச சோலார் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் வீடுகளில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய, “பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா” திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் காற்றாலை, அணு சக்தி சார்ந்த மின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ரயில் போக்குவரத்து முழுமையாக மின்மயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நீர்வழிப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் வனப் பகுதி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் புதிதாக 70,000 குளங்கள், ஏரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. வேளாண் சாகுபடியில் சொட்டு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
“அம்மாவின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மாட்டுச் சாணம், காய்கனி கழிவுகள் மூலம் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தற்போது சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்தியா மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்த பூமி நமது தாய். நாம் பூமித் தாயின் பிள்ளைகள். பூமித் தாயை காக்க வேண்டியது நமது கடமை ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மாநாட்டின் தொடக்க விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. நிறைவு நாள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.