இந்தியா

கொச்சி துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

டெக்ஸ்டர்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரான் போர்க்கப்பல் ஒன்றுக்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது. 

இலங்கை அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தகர்க்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே, மற்றொரு ஈரான் போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் லாவன்’ கொச்சி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

          

சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இப்பகுதிக்கு வந்திருந்த இந்தக் கப்பலில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பிப்ரவரி 28 அன்று ஈரான் தரப்பிலிருந்து அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மார்ச் 4 அன்று அந்தக் கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட்டது.

தற்போது 'ஐஆர்ஐஎஸ் லாவன்' கப்பலில் இருந்த 183 ஈரான் கடற்படை வீரர்கள் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1985-ல் கமிஷன் செய்யப்பட்ட இந்தக் கப்பல், தரை மற்றும் நீர் ஆகிய இரு நிலைகளிலும் போரிடக்கூடிய கனரகக் கப்பலாகும்.

இதேபோல், இலங்கையும் 'ஐஆர்ஐஎன்எஸ் புஷெர்' என்ற ஈரான் கப்பலுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தில் அனுமதி அளித்து, அதில் இருந்த 208 வீரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.

ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் கடற்படை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள சூழலில், இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது

SCROLL FOR NEXT