மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
புதுடெல்லி: எந்தவொரு நாட்டின் அழுத்தத்தின் கீழும் நாங்கள் செயல்பட மாட்டோம் என்று ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை சட்டம் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்டத்தை அமெரிக்கா இயற்றியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு இந்திய நாட்டு மக்களுக்கே முதலில் முன்னுரிமை வழங்கும். எங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
மற்ற நாடுகள் விதிக்கும் கட்டளைகளின் அடிப்படையில் இந்தியா முடிவுகளை எடுப்பதில்லை. நாட்டின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
அமெரிக்க அரசால் விதிக்கப்படும் வரிகள் நியாயமற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். நாங்கள் எந்தவொரு நாட்டின் அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். வணிக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமான வாய்ப்புகள் எங்கு கிடைக்கிறதோ, அங்கிருந்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயைப் பெறுவோம். இவ்வாறு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.