புதுடெல்லி: இண்டியா கூட்டணி வெறும் கற்பனை என்றும் களத்தில் அதற்கு உறுதியான நிலைப்பாடு இல்லை என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி இன்று கூடியுள்ள நிலையில் பாஜக இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளோடு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இண்டியா கூட்டணியில் பிளவும், குழப்பமும் நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி தங்களோடு கைகோர்ப்பதற்கான ஒரே காரணம் தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர, நாட்டை வலுப்படுத்துவது அல்ல பிராந்திய கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி அறிவுறுத்தியுள்ளது. எனவே, இண்டியா கூட்டணி இணையாது.
உண்மையில் இண்டியா கூட்டணி என்று எதுவும் இல்லை. அது வெறும் கற்பனை மட்டுமே. பெயரளவில் கூட்டங்கள் நடக்கின்றனவே தவிர, களத்தில் உண்மையான, உறுதியான நிலைப்பாடு ஒருபோதும் காணப்படுவதில்லை. இண்டியா கூட்டணிக்கு எந்த ஒரு குறிக்கோளும் இருந்ததில்லை. குழப்பம், அதிகார ஆசை, பிளவு ஆகியவை மட்டுமே அதில் இருந்தன. அந்த பிளவுகள் இப்போது நாள்தோறும் வெளிப்பட்டு வருகின்றன.
இந்த கட்சிகள் ஒன்றிணைந்தபோதுகூட அவை உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் இணையவில்லை. மாறாக தங்கள் வசதிக்காகவே இணைந்தன. காங்கிரஸ் கட்சி பிராந்திய கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதால் அக்கட்சியின் மீது பிராந்தியக் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அக்கட்சியோடு இணைந்து செயல்படப்போவதில்லை என்றும் திமுக தெரிவித்துவிட்டது.
ஜார்க்கண்ட்டின் 2வது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி தங்களை கேட்கக்கூட இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸுடன் மோதலில் உள்ளது. காங்கிரஸ் தங்களை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எறிந்துவிடும் என்ற எண்ணம் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சிக்கும் பிற கட்சிகளுக்கும் உள்ளன. இந்தியா கூட்டணி என்பது காகிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் வெளித்தோற்ற நடவடிக்கைகளிலும் மட்டுமே உள்ளது. உண்மையில் ஒருபோதும் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.