கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு தஞ்சம் அளிக்கவோ அல்லது இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ கூடாது என்றும், அதற்குப் பதிலாக அவர்களை நேரடியாக எல்லையில் உள்ள பிஎஸ்எப் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேறிகள் பெறும் நலத்திட்ட உதவிகள் கண்டறியப்பட்டு, அவை நிறுத்தப்பட்டு வருவதாகவும் பாஜக அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் எல்லை மாவட்டங்களில் சமீபத்திய வாரங்களில் சோதனைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், தடுப்பு முகாம்கள் அல்லது நாடு கடத்தல் நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, பலர் தாங்களாகவே முன்வந்து வங்கதேசம் திரும்ப விரும்புவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
நூற்றுக்கணக்கான மக்கள் வங்கதேசம் நோக்கிச் செல்லும் செய்திகளை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பேசுகையில், “ஊடுருவல்காரர்கள் அவர்களாகவே திரும்பிச் செல்வதால் அரசு அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காது’’ என்றார். இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகள் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவும் விதம் குறித்து ஊடகங்களிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வங்கதேசத்தின் குஷ்டியா மாவட்டத்தைச் சேர்ந்த தச்சர் ஒருவர் கூறுகையில், ‘‘இரவில் பிஎஸ்எப் வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து, ரோந்துப் பணியில் இடைவெளி கிடைத்தபோது எங்களை இடைத்தரகர் ஒருவர் எல்லையைக் கடக்க வைத்தார். அவருக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை கொடுத்தோம்’’ என்றார். ‘ஹல்டியா லைவ்' என்ற உள்ளூர் யூடியூப் சேனலிடம்' சட்டவிரோத வங்கதேச குடியேறி ஒருவர் கூறுகையில், “நான் கேரளாவில் வேலை செய்தேன்.
இப்போது வாடகைக்கு அறை எடுப்பதற்கு கூட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள ஆவணங்களை கேட்கிறார்கள், என்னிடம் அந்த ஆவணங்கள் இல்லை. இடைத்தரகர்களிடம் 5 முதல் 6 பேர் கொண்ட குழுக்கள் உள்ளன. இவர்கள் இரவில் எந்தெந்த பகுதிகளில் பிஎஸ்எப் நடமாட்டம் இல்லை என்று பார்க்கிறார்கள்.
இடைவெளி கிடைக்கும் தருணத்தில், மக்களை எல்லையைக் கடக்க வைக்கிறார்கள். சில நேரங்களில் எல்லையை கடக்க இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் 10 நிமிடங்களில் அது நடந்துவிடும்’’ என்றார். வங்கதேசத்துடனான இந்தியாவின் 4,096 கி.மீ. எல்லையில் நதிப் பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் உள்ளன.
இதில் கண்காணிப்பு குறைந்த பகுதிகளை பயன்படுத்தி வங்கதேசத்தினரை முகவர்கள் இந்தியாவுக்குள் அனுப்புகிறார்கள். இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, ஆவணங்களை ஏற்பாடு செய்ய திரிணமூல் காங்கிரஸின் உள்ளூர் அரசியல்வாதிகள் உதவியதாக வங்கதேச பெண் ஒருவர் கூறினார். ஏபிபி நியூஸிடம் அப்பெண் கூறுகையில், ‘‘மம்தாவின் கட்சி ஆட்சியில் இருந்தபோது வாக்காளர் அட்டையும் ரேஷன் அட்டையும் பெற்றேன். கட்சியின் ஆட்கள் எனக்கு ஆவணங்களைப் பெற உதவினார்கள். லட்சுமீர் பந்தர் திட்டத்தின் பலன்களையும் இரண்டு மூன்று ஆண்டுகள் பெற்றேன்’’ என்றார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு நிலைமை எவ்வாறு மாறியது என்பதை மற்றொரு குடியேறி கூறும்போது, “திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் போது எங்களை யாரும் எதுவும் சொல்லவில்லை. இப்போது ஆட்சி மாறிவிட்டது. இப்போது மக்கள் எங்களைத் துரத்துகிறார்கள். வங்கதேச மக்களைத் தங்க வைத்தால் தங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று வீட்டு உரிமையாளர்கள் பயப்படுகிறார்கள்’’ என்றார்.
மம்தா பானர்ஜியின் லட்சுமீர் பந்தர் திட்டத்தின் கீழ் தகுதியற்ற 30 லட்சம் மக்கள் பணப் பலன்களைப் பெற்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். இந்தியர் அல்லாதவர்கள் உட்பட இந்த போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ‘அன்னபூர்ணா பந்தர்' திட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பலன்கள் கிடைக்காது என்றும் அவர் கூறினார். தற்போது வங்கதேசத்திற்குத் திரும்பும் அல்லது மேற்கு வங்க எல்லைக்கு அருகில் காத்திருக்கும் பலர், தாங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் இருந்ததாகக் கூறினர்.
ஹக்கிம்பூர் எல்லைக்கு அருகே தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காத்திருந்த சலாம் தாலி என்பவர், இந்தியாவில் தச்சராக வேலை பார்த்ததாக ‘இந்தியா டுடே' சேனலிடம் தெரிவித்தார். வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு இடைத்தரகருக்கு ரூ.8,000-10,000 கொடுத்து இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறினார்.
மற்றொரு குடியேறி ஏபிபி நியூஸிடம் கூறுகையில், தனக்கு 10 வயது இருக்கும் போது தனது பெற்றோர் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வந்ததாகக் கூறினார். ‘‘நான் சிறியவனாக இருந்தபோது என் பெற்றோர் என்னை இந்த நாட்டுக்கு அழைத்து வந்தனர். தந்தை தச்சராக வேலை பார்த்தார். யாரும் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் வேலை செய்தோம், சாப்பிட்டோம், இங்கேயே தங்கினோம்’’ என்றார்.