புதுடெல்லி: தாய் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் உணர்கிறேன் என்று ராம்நாத் கோவிந்த் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசியுள்ளார்.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் ‘இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற பெயரில் எழுதியுள்ள சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. விழாவில் புத்தக்கத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். அவரது சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும். வரும் தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. இளைய தலைமுறையினரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இது ரீல்ஸ் காலம்; சமூக ஊடக பிரபலங்கள் உங்களை வேறு திசையில் ஈர்த்து உங்களது கவனத்தை சிதறடிக்கக்கூடும். குறுக்கு வழியைத் தேடிப் போகும் இந்தக் காலகட்டத்தில் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குறுக்குவழிகள் உங்கள் வாழ்வை சீரழித்து விடும். இளைஞர்களே நீங்கள் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் உங்களுக்கு பிடித்தமானவர்களின் சுயசரிதையை படியுங்கள். சுயசரிதைகளைப் படித்து மற்றவர்களின் போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் கோவிந்த் ஓய்வெடுக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்ற திட்டத்துக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அவர் தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறார்.
அவரது சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். ராம்நாத் கோவிந்த் தனது புத்தகத்தில் அவரது தாயார் குறித்து எழுதியுள்ளார். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அவரது தாயார் எப்படி இறந்தார் என்பதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது வலியை நான் உணர்கிறேன். நான் அதிர்ஷ்டம் மிக்கவன். எனது தாயார் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்து என்னை ஆசீர்வதித்துச் சென்றார்.
ஆனாலும், அவர் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் நான் ஆழமாக உணர்கிறேன். ஒருவரின் மன உறுதி எப்படிக் கடினமான சூழல்களைக் கடந்து மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவிக்கு உயர உதவும் என்பதை ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.