இந்தியா

“மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டார்” - ராகுல் கருத்தால் மக்களவையில் அமளி

மோகன் கணபதி

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று ராகுல் காந்தி கூறியதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்களில் ஈடுபட அனுமதி அளித்தவர் அமித் ஷா. மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர் அமித் ஷா.

உள்துறை அமைச்சகம் பதிலளிக்க மிகவும் அஞ்சிய சில சங்கடமான கேள்விகளை மாணவர்கள் எழுப்பியதே இதற்குக் காரணம்.” என தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளும் கட்சி எம்பிக்கள் பலரும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ராகுல் காந்தி தொடர்ந்து பேச அனுமதி அளிக்கக்கூடாது என அவர்கள் சபாநாயகரை வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, “உள்துறை அமைச்சர் குறித்த கருத்துக்களுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவையின் செயல்பாடுகளை தொடர முடியாது.” என தெரிவித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “வன்முறை அல்லது பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த உள்துறை அமைச்சரால் மட்டுமே அனுமதி அளிக்க முடியும். எவர் மீதும் வன்முறை அல்லது பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

ராகுலின் இந்த கருத்துக்கு ஆளும் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்காவிட்டால் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் என்னால் அவையை நடத்த அனுமதிக்க முடியாது. நாம் அவையின் கண்ணியத்தை குலைக்கிறோம்.” என்று கூறினார்.

SCROLL FOR NEXT