மும்பை: மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு ஜூலை 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தானே மாவட்டம் மற்றும் கல்யாண்-டோம்பிவ்லி நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை மும்பை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் இந்தக் கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடர்கிறது. இப்பகுதிகளில் பல இடங்களில் கனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனே, சதாரா மற்றும் நாசிக் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கான அவசரக்கால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.