புதுடெல்லி: ஹரியானா மாநிலம் ஹன்சி பகுதியில் ஜிம் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் இருவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
டெல்லி மற்றும் ஹரியானா போலீஸார் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய தேடுதல் வேட்டையின் போது இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹரியானாவின் பகதூர்கர் பகுதியில் ஜிம் உரிமையாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவும் ஹரியானா மாநில சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கூட்டு ஆபரேஷனை மேற்கொண்டன.
அப்போது போலீஸாரை நோக்கி குற்றவாளிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதை அடுத்து, தற்காப்புக்காக போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் லாரன்ஸ் பிஷ்னோய் - ஹாரி பாக்ஸர் கும்பலைச் சேர்ந்த பர்வேஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி, ஹரியானாவின் ஹன்சி பகுதியில் கபில் என்ற உடற்பயிற்சிக் கூட உரிமையாளர், 6 முதல் 7 பேர் கொண்ட குழுவினருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சமூக வலை தளங்களில் இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஹரியானா போலீஸார், கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பர்வேஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவர்களது தலைக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.