நர்சிபட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தைச் சேர்ந்த நவ்யா என்பவருக்கும் ஸ்ரீவர்ஷா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆடி மாதத்தில் மணப்பெண் நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்த அவரை அழைத்துச் செல்ல, ஸ்ராவண மாதம் தொடங்கியிருப்பதால் கணவர் ஸ்ரீவர்ஷாவும் அவரது பெற்றோரும் நவ்யாவின் வீட்டிற்கு வந்தனர்.
இந்நிலையில், நவ்யா வின் பெற்றோர்களான ரமேஷ் குமார்-கலாவதி தம்பதியினர், தங்களது மருமகனை சிறப்பாக வரவேற்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி, மாப்பிள்ளை வீட்டு வாசலை நெருங்கியதில் இருந்து உள்ளே வரும் வரை ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது.
வீட்டிற்குள் வந்த மாப்பிள்ளைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட 100 வகை சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டு, மீண்டும் ஒருமுறை அவரை வியப்பில் ஆழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்காக பல உற்றார், உறவினர்கள் கலந்துகொண்டதால் அந்த வீடே திருவிழா களைகட்டியது.