போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை மாலை சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தில் ஜாபல்பூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடத்துள்ளது. அம்மாநில சுற்றுலாதுறை சார்பில் அங்குள்ள பர்கி அணையில் படகுகள் இயக்கப்படுகிறது. இந்த அணை நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வழக்கம் போலவே வியாழக்கிழமை மாலை சுற்றுலா பயணிகளுடன் க்ரூஸ் ரக படகு இயக்கப்பட்டுள்ளது. அதில் 29 சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த படகு, நீரில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் பெண்கள். 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங், மாநில அமைச்சர் ராகேஷ் சிங் ஆகியோர் உள்ளனர். இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் மீட்பு பணி சவாலடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
“இந்த விபத்து மாலை 6.15 மணிக்கு நடந்துள்ளது. 29 சுற்றுலா பயணிகள் படகில் பயணித்துள்ளனர். இரண்டு பேர் கப்பலை இயக்கி உள்ளனர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. காவல் துறையினர், பேரிடர் கால மீட்பு படையினர், அரசு அதிகாரிகள் இங்கு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரையும் மீட்ட பிறகு இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.