புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான டெண்டர் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. குறிப்பாக, பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் கமிஷன் தொகைகள் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான பணப் பரிவர்த்தனை தடயம் இருப்பதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு கூறியது.
இதுதொடர்பாக, விஜிலென்ஸ் இயக்குநரகம் அளித்த புகாரின் அடிப்படையில் 2024 மே மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைடுத்து, சத்யேந்தர் ஜெயின் ஆக.19-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி திக் வினய் சிங், இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.