வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட இடம்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இந்த விழா நடைபெற்ற இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கர்நாடக போலீஸார் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வழக்கமான சோதனைகள் நடைபெற்றன. அப்போது வாழும் கலை அமைப்பு ஆசிரமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் 2 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை நடைபாதையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த வெடிபொருட்களை கொண்டு வந்தது யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். தலைநகர் டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்பேரில் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெங்களூருவிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கர்நாடக போலீஸார் தெரிவித்தனர்.