புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஏடிஆர், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புகளும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஒத்தி வைத்தது.
இந்நிலையில், அம்மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படாத நிலை உள்ளது. வேகமான நகரமயமாக்கலில் வாக்காளரின் புலம்பெயர்வும், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட காரணத்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெறுகின்றன.
இதுபோன்ற காரணங்களால் ஏற்படும் துல்லியத்தன்மை பாதிப்பைத் தடுக்கவே எஸ்ஐஆா் பணி அவசியமாகிறது என்ற வாதம் ஏற்கும்படி உள்ளது. ஜனநாயக முறையின் நம்பகத்தன்மையே வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை சார்ந்துள்ளது. நியாயமான, நேர்மையான தேர்தல் வெறும் வாக்குப் பதிவு முறையில் மட்டும் இல்லை.
மாறாக, வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை சார்ந்துள்ளது. எஸ்ஐஆா் பணிகள் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. எஸ்ஐஆா் பணிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துடன் முரண்படவில்லை. எனவே, எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.