இந்தியா

ரூ.13.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: பெங்களூருவில் 3 பேர் கைது

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து பாகலூர், கெம்பே கவுடா நகர், ஒயிட் ஃபீல்ட் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாகலூரை சேர்ந்த அஸ்வின் (26), மொபினா (25) ஆகிய இருவரிடம் இருந்து 5.46 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 5.34 கிலோ ஷரஸ், 8,335 எல்எஸ்டி கட்டிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின. அவர்களிடம் இருந்து 1 கார், 2 இரு சக்கர வாகனங்கள், 3 செல்போன்கள், ரூ.25 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

          

இந்த 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து பாகலூர் போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், "கேரளத்தைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி படிப்பிற்காக பெங்க ளூருவுக்கு வந்துள்ளனர். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, தாய்லாந்தில் இருந்து கூரியர் மூலம் போதைப் பொருட்களை வர வழைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதேபோல ஒயிட் ஃபீல்டில் 27 கிலோ கஞ்சாவும், கெம்பேகவுடா நகரில் 3 கிலோ ஹைட்ரோ கஞ்சாவும் சிக்கியது. மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்க‌ளின் சந்தை மதிப்பு ரூ.13.5 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT