புதுடெல்லி: நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ராஜஸ்தானின் ஜெய்சல்மார் முஸ்லிம்கள் ஒரு வித்தியாசமான முயற்சியை தொடங்கி உள்ளனர்.
நேற்று காலை ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அந்நகரின் முஸ்லிம் சமூகத்தினர் பசுவை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க ஒரு கையெழுத்து இயக்கம் தொடங்கினர். இதை ஜமாத் எ உலமா இ ஹிந்த் தலைமையில் ஜெய்சல்மேரின் காதீம் ஈத்கா கமிட்டி தொடங்கி உள்ளது. இதற்காக, ஜெய்சல்மேர் ஈத்கா மைதானத்தில் ஒரு சிறப்பு கவுன்ட்டர் அமைக்கப்பட்டது. இங்கு தொழுகை முடிந்த உடன் அனைத்து முஸ்லிம்களும் வரிசையாக நின்று கையொப்பம் இட்டனர்.
கடந்த மே 24ம் தேதி, ஜெய்சல்மாரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நூற்றுக்கணக்கான பசுக்களின் சடலங்கள் கிடந்தன. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், முஸ்லிம்களின் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினர். இந்த கையொப்பங்களுடன் கூடிய கோரிக்கை மனுவை ஜெய்சல்மார் ஆட்சியர் மூலமாக, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பசுவுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் குரல் கொடுப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் கடந்த 2014-ல் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (அர்ஷத் மதானி பிரிவு) அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரினார். பசு வதை விவகாரத்தில் அரசியல் ஆதாய முயற்சியை தடுப்பதும், கும்பல் வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.
இதற்காக, பிரதமர் மோடி மற்றும் வட மாநில முதல்வர்களை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் மாநிலமாக திகழும் உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை முதலில் சந்திக்க உள்ளனர். இது போன்ற கோரிக்கைகள் இதுவரையிலும் இந்து அமைப்புகளிடம் இருந்தே எழுந்தது குறிப்பிடத்தக்கது.