மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேசினார். அப்போது முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்சினை குறித்து பேச அவர் முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கின. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கின. இதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸில் கையெழுத்திடவில்லை.
இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் அளிக்கப்பட்ட நாள் முதலே அவர் மக்களவையை நடத்தவில்லை. மூத்த எம்.பி.க்களே அவையை நடத்தி வருகின்றனர். நாளைய தினமும் அவர் மக்களவையை வழிநடத்த மாட்டார். அவையில் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பார்.
மக்களவையை நடத்தும் மூத்த எம்.பி., சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து முதலில் வாக்கெடுப்பு நடத்துவார். 50 எம்.பி.க்கள் எழுந்து தீர்மானத்தை ஆதரித்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கும். விவாதம் நிறைவடைந்த பிறகு இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற அவையில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 238 எம்.பி.க்கள் (திரிணமூல் கட்சியையும் சேர்த்து) மட்டுமே உள்ளனர். எனவே, சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 9 முதல் 11-ம் தேதி வரை எம்.பி.க்கள் அனைவரும் அவையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று இரு கட்சிகளும் தங்களது எம்.பி.க்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளன.
திரிணமூல் திடீர் ஆதரவு: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அளிக்கப்பட்ட போது திரிணமூல் காங்கிரஸின் 28 எம்.பி.க்கள் கையெழுத்திடவில்லை. தற்போது திடீர் திருப்பமாக தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திரிணமூல் எம்.பி.க்களுக்கு அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.