நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,500 பேர் வசிக்கும் செந்தூர்சானி கிராமத்தில் 3 மாதத்தில் 27,398 குழந்தை பிறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சைபர் மோசடி நடைபெற்றுள்ளது என தொழில்நுட்ப குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தில் உள்ளது செந்நூர்சானி கிராமம். இதன் மக்கள் தொகை 1,500. இந்த கிராம பஞ்சாயத்து மூலம் 3 மாதத்தில் 27,398 பேருக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு தாமதமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சட்டவிரோதமான மற்றும் தாமத பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை ரத்து செய்யவும் மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாத பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. விசாரணை குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 27,398 பிறப்பு சான்றிதழ் ஆவணங்களில் 27,397 ஆவணங்கள் செந்தூர்சானி பஞ்சாயத்தை சேர்ந்தது அல்ல எனவும், அவைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளன எனவும் தெரியவந்தது.
மாநில அளவில் ஆன்லைன் உள்நுழைவு (லாகின்) பரிசோதனை மேற்கொண்டதில் செந்தூர்சானி கிராம பஞ்சாயத்தின் பதிவு ஐடி(சிஆர்எஸ்) மும்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் இந்த விவகாரம் தொழில்நுட்ப ஆய்வுக்காக புனேவில் உள்ள சுகாதார சேவை துணை இயக்குனருக்கும், டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்துக்கும் அனுப்பப்பட்டது. சைபர் மோசடி மூலம் பிறப்பு சான்றிதழ் ஆவணத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது தொழில்நுட்ப குழுவினர் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. எனவே இது தொடர்பாக யவாத்மால் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சைபர் மோசடியின் பின்னணியில் செயல்பட்டது யார் என விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் சிஆர்எஸ் ஐடி, கடவுச் சொல் அல்லது ஓடிபி ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என யவாத்மால் மாவட்ட பிறப்பு -இறப்பு சான்றிதழ் பதிவாளர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.