தேவோஸ்மிதா பால்
புதுடெல்லி: குடியிருந்த வீட்டை அபகரிக்க, மேற்கு வங்கத்திலிருந்து டெல்லி சென்று பேராசிரியை ஒருவரை கொலை செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் தேவோஸ்மிதா பால். கணவரை விட்டு கடந்த 2022ம் ஆண்டு பிரிந்த இவர், கிழக்கு டெல்லியின் வசுதாரா என்க்ளேவ் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரது தாய் வழி தாத்தாவுக்கு மேற்கு வங்கத்தில் உள்ளவர் தாமன் பகுதியில் பல கோடி மதிப்பில் வீடு மற்றும் சொத்துகள் உள்ளன.
அவர் இறந்ததால் இந்த சொத்துக்கள் பேராசிரியை தேவோஸ்மிதா பாலுக்கு கிடைத்தது. தனது தாத்தா வீட்டில் குடியிருந்த ராம்பிரசாத் தாஸ் என்பவரை காலி செய்யும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராம் பிரசாத் தனது மனைவி பன் ஸ்ரீ தாஸ் மற்றும் மகனை அழைத்துக்கொண்டு டெல்லியில் உள்ள தோவோஸ்மிதா பால் வீட்டை கடந்த புதன் கிழமை அடைந்தார்.
அரை மணி நேரத்தில் தேவோஸ்மிதா பாலை தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு ராம் பிரசாத் தாஸ் தனது குடும்பத்தினருடன் தப்பிவிட்டார். தேவோஸ்மிதா பாலின் சகோதரி தேவரதி என்பவர் போன் செய்த போது அந்த போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் தேவரதி, தனது சகோதரியின் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, தேவோஸ்மிதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த எதுவும் திருடு போகவில்லை.
இதுகுறித்து போலீஸார் அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, அன்றைய தினம் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த 200 பேரிடம் விசாரித்தனர். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாடகை கார் எண்ணை வைத்து அதில் வந்த பயணிகளின் விவரம் கண்டறியப்பட்டது.
இதை வைத்து போலீஸார் மேற்கு வங்கம் வர்தாமன் பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத் தாஸ் மற்றும் அவரது மனைவி, மகனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். தாங்கள் வீட்டை காலி செய்ய சொன்னதால், அதை அபகரிக்க தேவோஸ்மிதா பாலை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.