இந்தியா

“தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் கடும் விளைவுகள்...” - கார்கே எச்சரிக்கை

வெற்றி மயிலோன்

புது டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக மோடி அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது குறித்து முழுமையான விவாதம் தேவை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக மோடி அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறைப் பணி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அரசியல் ஆதாயத்தைப் பெறும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே, ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மோடி அரசு கூட்டியுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும். அரசியலமைப்புத் திருத்த மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றுவதில் அரசு தீவிரமாக இருக்கிறது.

          

முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் நாட்டின் தேர்தல் முறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியில் உள்ள எங்கள் நண்பர்களுடனும் இப்பிரச்சினைகள் குறித்து விவாதித்து, நாங்கள் ஒரு கூட்டு உத்தியை வகுப்போம். நாங்கள் ஒற்றுமையுடன் இதனை முன்னெடுத்துச் செல்வோம்" என்று கார்கே உறுதியளித்தார்.

கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சச்சின் பைலட், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT