புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8-ம் தேதி முதல் நாடு தழுவிய காங்கிரஸ் கட்சி நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (ஜி ராம் ஜி) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஊரக வேலை உறுதித் திட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், மசோதாவின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வேணுகோபால் கூறியதாவது:
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தால் வறுமை குறைந்தது. தொழிலாளர்களின் இடம்பெயர்வு குறைந்தது. புதிய கால்வாய்கள், அணைகள் கட்டப்பட்டன. கரோனா பெருந்தொற்று மற்றும் நெருக்கடியான காலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் மக்களின் பாதுகாவலனாக விளங்கியது.
காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி என்ற புதிய திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. புதிய திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக அழித்து வருகிறது. இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகளின் போராட்டத்தால் அந்த 3 சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படும். புதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் காக்கும் இயக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் ஜனவரி 8-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் தொடங்கப்படும். இந்த போராட்டம் தொடர்ந்து 45 நாட்கள் நீடிக்கும். இது தேசிய இயக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.