இந்தியா

“கர்நாடக அமைச்சராக ஒரு பெண்கூட பதவியேற்காதது ஏமாற்றமளிக்கிறது” - மார்கரெட் ஆல்வா

மோகன் கணபதி

பெங்களூரு: டி.கே.சிவகுமார் தலைமையில் நேற்று அமைந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண்கூட இல்லாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் 25-வது முதல்வ‌ராக டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை பதவியேற்றார். துணை முதல்வராக ஜி.பரமேஸ்வராவும், அமைச்சர்களாக கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சத்தீஷ் ஜரகிஹோலி, கிருஷ்ணா பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கந்தரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோரும் பதவியேற்றனர்.

முதல்வர் டி.கே.சிவகுமாரின் தலைமையிலான இந்த அமைச்சரவையில் ஒருவர் துணை முதல்வராகவும், 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்ற நிலையில் இவர்களில் ஒருவர்கூட பெண் இல்லை.

இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா, “கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துகள். அவருக்கும் அவரது குழுவினருக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். பதவியேற்ற புதிய கர்நாடக அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணாவது இருப்பார் என எதிர்பார்த்திருந்தேன். ஒருவர்கூட இல்லாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பெண் எம்எல்ஏக்களும் 5 பெண் எம்எல்சிகளும் உள்ளனர். இவர்களில், உமாஸ்ரீ, லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். இருந்தும் ஒருவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.

எனினும், விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பெண் உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.கே.சிவக்குமாரால் அதிகபட்சமாக 34 அமைச்சர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் இன்னும் 21 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT