பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பாஜக வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி வழிவகுப்பதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: மட்டத்தூரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளிக்க பாஜகவுடன் கைகோத்தனர். இதன்மூலம், காங்கிரஸார் பாஜகவில் சேருவதற்கு வாய்ப்புக்காக காத்திருப்பதை மட்டத்தூர் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. பாஜக அவர்களை முழுவதுமாக விழுங்கிவிட்டது. இத்தகைய அரசியல் நாடகம் கேரளாவில் முன்னெப்போதும் கண்டிராத நிகழ்வாகும்.
2016-ல் அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் உட்பட 44 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 43 பேர் ஒரே இரவில் என்டிஏ-வுக்குத் தாவியதை யாரும் மறந்திருக்க முடியாது. 2021-ல் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாதபோதிலும் பாஜக ஆட்சிக்கு வந்த புதுச்சேரி, 2019-ல் முழு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் பாஜக-வுடன் இணைந்த கோவாவும் இதற்கான ஏனைய சிறந்த உதாரணங்கள்.
மட்டத்தூரில் ஒரு எல்டிஎஃப் தலைவர் பதவிக்கு வருவதைத் தடுப்பதற்காகவே காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வுடன் கைகோத்தனர். இதிலிருந்து நிரூபணமாவது என்னவென்றால், இன்று காங்கிரஸில் இருப்பவர்கள் ஒரே இரவில் பாஜக-வினராக மாறத் தயங்க மாட்டார்கள் என்பதுதான்.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கை சின்னத்திற்குப் பதிலாக தாமரைச் சின்னத்தை ஏற்றுக் கொள்வதில் எந்த தார்மீக முரண்பாட்டையும் உணர்வதில்லை என்பது வெளிப்படை.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தபடி, மாநிலம் முழுவதும் பல இடங்களில் பாஜக-காங்கிரஸ் இடையே சமரசங்கள் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகின்றன. இங்கு பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கைகொடுக்கிறது. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், மட்டத்தூர் பஞ்சாயத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக-வுக்கு மாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். கேரள மாநிலத்தில் விவாதிப்பதற்கு வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லாததால் மட்டத்தூர் சம்பவத்தை சிபிஎம் எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.