இந்தியா

“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” - குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்

மோகன் கணபதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், அப்பாவிகள் கொல்லப்படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை என்று மாநில மதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்த கொலை மிகவும் துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது. இதுபோன்று அப்பாவிகளைக் கொல்வதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. இதை வன்மையாகக் கண்டிக்க வார்த்தைகளே இல்லை. இத்தகைய தாக்குதல்கள் இனி நிகழாமல் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்லப்பட்ட இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்த தலா ரூ.6 லட்சம் உடனடி நிதி உதவி இல்லாமல் இந்த உதவி கூடுதலாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சுட்டுக்கொலை:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் ரத்ரே (24), சாரங்கர் - பிலாய்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பூபேந்திர பைனா (28) ஆகியோர், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக தீபக் ரத்ரேவிடம், எந்த மாநிலம், எந்த மதம் என்பதை கேட்டதாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தைச்சேர்ந்த இந்து என்பதை உறுதிப்படுத்திய பிறகே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது சகோதரர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT