பாலக்காடு: தமிழக முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றதை கேரளாவில் அவரது ரசிகர்கள் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் பதவியேற்பு விழாவை, கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். திரையரங்குகளே விழாக்கோலம் பூணும் வகையில், ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து முதல்வராக விஜய் பதவியேற்ற தருணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
உற்சாகக் கொண்டாட்டங்கள் பாலக்காட்டில் திரண்ட ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரசியலில் நுழைந்தபோது விஜய் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு இந்த வெற்றி ஒரு தக்க பதிலடி என்றும், இது சாமானிய மக்களின் வெற்றி என்றும் அவரது ஆதரவாளர்கள் உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தனர்.
வரலாற்றுத் தருணம் திரைத்துறையில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், தற்போது தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது. கேரளாவிலும் அவருக்குள்ள பெரும் ரசிகர் பட்டாளம், இந்த நிகழ்வை ஒரு மிகப்பெரிய திருவிழாவாக மாற்றிக் காட்டியுள்ளது.