கர்னூல்: ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் ஆகும்.
அசோகர் காலத்து சாசனங்கள்:
இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்துவைத்துப் பேசியதாவது: ராயல சீமா பகுதியை ரத்தின சீமாவாக மாற்றுவது இந்த ஜொன்னகிரியில் தொடங்க உள்ளது. இப்பகுதியை முன்பெல்லாம் சுவர்ணகிரி என்று அழைத்தனர். அசோக சக்கரவர்த்தியின் 4-வது தலை நகரம் இதுவாகும்.
பல நூறு வருடங்களுக்கு முன்பே இங்கு சாலைகளில் ரத்தின கற்கள், தங்கம் போன்றவற்றை கொட்டி விற்பனை செய்வார்கள். அசோகர் காலத்து சாசனங்கள் இதை நமக்கு தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் கேஜிஎஃப் தங்கச் சுரங்கம் குறித்து நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது ஜொன்னகிரி குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் வெட்டி சுத்தம் செய்யப்படும். ஆரம்பத்தில் 400 கிலோவில் தொடங்கி போகப்போக 1,000 கிலோவுக்கு வரும்.
தற்போது இங்கு 800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். விரைவில் மேலும் 1,500 ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவர். வருங்காலத்தில் இங்கு 5,000 ஊழியர்கள் பணி செய்வார்கள்.
ட்ரோன் சிட்டி: ஜொன்னகிரி ஆந்திராவின் ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறும். நகைக்கடைகள் இங்கு அமைக்கப்படும். ஆந்திராவில் தொழில் தொடங்க பலர் முன் வருகின்றனர்.
நாட்டிலேயே மிகப்பெரிய ட்ரோன் சிட்டி ஆந்திராவில் அமைகிறது. விரைவில் கர்னூலில் உயர் நீதிமன்ற கிளை வர உள்ளது. 2028ல் ராயல சீமாவில் இரும்பு தொழிற்சாலை அமையும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.