புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் முடிந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தொண்டராக பணியாற்றி அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் அபிஜித் திப்கே என்பவர் கடந்த மே மாதம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணையதளத்தையும், சமூக வலைதளப் பக்கத்தையும் தொடங்கினார்.
இவர் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கையில் எடுத்தார். முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. இதில் சமூக சேவகர் சோனம் வாங்சுக் இணைந்து உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும், மாணவர்களும் ஆதரவு அளித்ததால் இது மிகப் பெரிய போராட்டமாக மாறியது. இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சியினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
இதன் முடிவாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற சம்பவங்களின் விவரம்:
>> மே 3: நீட் இளநிலை தேர்வு நடத்தப்பட்டது. 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
>> மே 12: வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
>> மே 16: அபிஜித் திப்கே என்ற இளைஞர் கரப்பான் பூச்சி கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கினார்.
>> ஜூன் 2: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக முக்கிய நகரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
>> ஜூன் 6: சிஜேபி போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்காக அபிஜித் திப்கே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
>> ஜூன் 11: தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் மாணவர்களுக்கு நிவாரணம் கோரி சிஜேபி 5 அம்ச அறிக்கையை வெளியிட்டது.
>> ஜூன் 20: ஜந்தர் மந்தரில் சிஜேபி காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியது.
>> ஜூன் 28: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
>> ஜூலை 18: டெல்லி காவல் துறை சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தது.
>> ஜூலை 20: சிஜேபி கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களை நொறுக்கின்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
>> ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை: மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.
>> ஜூலை 21: ராகுல் தலைமையில் காங். எம்.பி.க்கள் பிரதமர் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
>> ஜூலை 23: வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
>> ஜூலை 24: மத்திய அரசின் உறுதியைத் தொடர்ந்து சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
>> ஜூலை 24: மத்திய அரசு - சிஜேபி இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதியளித்தது.
>> ஜூலை 25: கல்வி அமைச்சர் பதவியைத் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.