புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு தங்களின் முதன்மை கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக சிஜேபி அமைப்பு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு சிஜேபி நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஜேபி தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சோனம் வாங்சுக்கின் காந்திய வழியிலான சத்தியாகிரகம் இந்த தேசத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்காக அவர் மேற்கொண்ட 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் ஒரு உயரிய தியாகமாகும். சாத்தியமற்ற பல சவால்களுக்கு மத்தியிலும் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டிய தர்மத்தின் ஆற்றலாக இது வரலாற்றில் நிலைத்து நிற்கும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் அமைதியான முறையில் வீடு திரும்புமாறு சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.