புதுடெல்லி: டெல்லியில் 24, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை வரும் சனிக்கிழமைக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக அக்பர் சாலை பங்களா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுதான், கோட்லா மார்க் பகுதியில் 'இந்திரா பவன்' என்ற புதிய தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி திறந்தது. இருப்பினும், அக்பர் சாலை அலுவலகம் இன்னும் காலி செய்யப் படவில்லை. இந்த அலுவலகம் மட்டுமின்றி, 5, ரைசினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தையும் காலி செய்யுமாறு அக்கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்ட ரீதியான தீர்வுகளைக் காண்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வைஸ்ராய்லின்லித்கோ பிரபுவின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த சர் ரெஜினால்ட் மேக்ஸ்வெல்லின் இல்லமாக இது இருந்தது.
அதன் பின்னர், 1960-களின் தொடக்கத்தில், இந்தியாவுக்கான மியான்மர் தூதர் டாவ் கின் கியி இங்கு வசித்தார். நோபல் பரிசு பெற்ற அவரது மகள் ஆங் சான் சூகி, தனது இளமைக் காலத்தின் சில ஆண்டுகளை இந்த இல்லத்தில்தான் கழித்தார்.
காங்கிரஸ் கட்சி 1977-ல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்து பிளவுபட்டபோது, இந்திரா காந்தி தலைமையிலான அணிக்கு அலுவலகம் தேவைப்பட்டது. அப்போது இந்திராவின் தீவிர விசுவாசியான மாநிலங்களவை உறுப்பினர் ஜி. வெங்கடசாமி, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த அரசு பங்களாவை வழங்கினார்.
அதன் பிறகு, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலம் முழுவதும் 48 ஆண்டுகளாக இதுவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ முகவரியாகத் திகழ்ந்தது. தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.