புதுடெல்லி: கடந்த 2021 ஏப்ரல் முதல் 2025 நவம்பர் வரை நாடு முழுவதும் டிஜிட்டல் கைது உட்பட சைபர் மோசடியால் பொதுமக்கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியைத் தடுக்க சிபிஐ சார்பில் அபய் என்ற பெயரில் ‘சாட்பாட்' வசதி தொடங்கப்படவுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘சாட்பாட்' வசதியை தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: சிபிஐ அமைப்பின் சாட்பாட் மூலம் பொதுமக்கள் தரப்பில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்படும்.
உதாரணமாக மர்ம நபர், யாரையாவது டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மொபைல் போனில் மிரட்டல் விடுத்தால், உடனடியாக அபய் சாட்பாட் வசதியை பயன்படுத்தலாம். மர்ம நபர் ஏதாவது ஒரு விவகாரத்தைக் கூறி மிரட்டல் விடுப்பது வழக்கம். அது குறித்து சாட்பாட்டில் கேள்வி எழுப்பி தெளிவான விளக்கத்தைப் பெறலாம். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சாட்பாட் வசதியை தொடங்குகிறோம். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.