நாசிக்: ஹெலிகாப்டர் பின்னணியில் இளம் ராணுவ கேப்டன் ஒருவர் தனது காதலியிடம் திருமண விருப்பத்தை தெரிவித்த விவகாரம் சர்ச்சையாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ராணுவத்தின் ஹெலிகாப்டர் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்பது வழக்கமான நடைமுறை.
இங்கு பயிற்சியை நிறைவு செய்த இளம் ராணுவ கேப்டன் ஒருவர், ராணுவ ஹெலிகாப்டர் அருகே தனது காதலியை அழைத்து மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி, திருமண விருப்பத்தை தெரிவித்தார். இந்த போட்டோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. பலர் இதை பாராட்டினர். சிலர் இச்சம்பவம் ராணுவ ஒழுக்கம், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘இதில் என்ன இருக்கிறது. ராணுவத்தினரும் மனிதர்கள்தானே. ராணுவ ஹெலிகாப்டர் முழுவதுமாக படத்தில் தெரிவது எல்லாம் பாதுகாப்பு விதிமுறை மீறல் அல்ல. ராணுவ கண்காட்சிகளில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
உற்சாகமான இளம் அதிகாரிகளை கடுமையான கெடுபிடிகளுக்கு ஆளாக்க கூடாது. ராணுவத்தில் இதுபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த போட்டோவை ராணுவம் ஆட்கள் தேர்வு விளம்பரத்துக்கு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்’’ என நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர்.