இந்தியா

ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: ரூ.3,030 கோடி மதிப்பில் 3 ரசாயனப் பூங்காக்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்திய ரசாயனத் தொழில் துறை மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் பவ்யா ரசாயன் என்ற திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மூன்று ரசாயனப் பூங்காக்கள் அமைக்கப்படும். இத்திட்டம் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ரூ.3,030 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பவ்யா ரசாயனத் திட்டமானது, மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் ரசாயனத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ரசாயனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இந்தத் தொழில்துறை உலகளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாறும்.

மருந்துப் பொருட்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து போன்ற பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களையும், பெட்ரோ ரசாயனங்களையும் பவ்யா ரசாயன் திட்டம் ஊக்குவித்து அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தும்.

இத்திட்டத்தின்படி, மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவை ஒவ்வொன்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.

இந்தப் பூங்காக்கள் ரசாயனத் தொழிலுக்கான உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிறந்த நீர் விநியோக அமைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்” என தெரித்தார்.

SCROLL FOR NEXT