இந்தியா

ஆந்திராவில் பேருந்து - லாரி மோதி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

வெற்றி மயிலோன்

மார்க்கபுரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், இன்று (மார்ச் 26) அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்துப் பேசிய மார்க்கபுரம் மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் பி. ராஜா பாபு, “பேருந்தில் பயணித்த 41 பயணிகளில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்து மார்க்கபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 25 பேரில், 10 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமான நிலையில் உள்ள அந்த 5 பேரும் குண்டூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

          

காவல்துறை அதிகாரிகளின் தகவலின்படி, காலை 5:30 மணி முதல் 6:00 மணிக்குள், ஒரு வளைவுப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது, ​​கனி கிரியிலிருந்து சரளைக் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு டிப்பர் லாரி மீது, தனியார் சுற்றுலாப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. விபத்துக்குள்ளான அந்தப் பேருந்து ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பேருந்து தெலங்கானாவின் நிர்மல் பகுதியிலிருந்து ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள விஞ்சமூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது.

விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஆந்திர பிரதேச பஸ் விபத்து பற்றி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், நிவாரண உதவிகளை அறிவித்த பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து தகவல்களை அறிய மார்க்கபுரம் மற்றும் நெல்லூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடர்பு எண்கள்: 6304285613, 9985733999, 7989537285, 9703578434 (மார்க்கபுரம்); 7995575699 மற்றும் 08612331261 (நெல்லூர்).

SCROLL FOR NEXT