ஹைதராபாத்: மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு ஹைதராபாத்தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதி வளாகத்தில் எஸ்பிபி-யின் சிலையை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, ஹரியானா முன்னாள் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எஸ்பிபியின் 7.2 அடி உயர வெண்கல சிலை உருவாக்கப்பட்டது. நின்ற நிலையில் உள்ள எஸ்பிபியின் சிலைக்கு தங்க வர்ணம் பூசப்பட்டிருந்தது. இவ்விழாவில் அமைச்சர் ஸ்ரீதர் பாபு, தெலங்கானா பாஜக தலைவர் ராமசந்தர் ராவ், எஸ்பிபியின் மனைவி, பாடகரும் அவரது மகனுமான எஸ்பிபி சரண், தங்கை எஸ்பி சைலஜா, அவரது குடும்பத்தார்பங்கேற்றனர்.
இவ்விழாவில் வெங்கைய்ய நாயுடு பேசும்போது, ‘‘பாடகர் எஸ்பிபி அனைவருடனும் நட்புடன் பழகுபவர், மரியாதையுடன் நடந்து கொள்பவர். மேலும், அவர் ஒரு பரிபூரண கலைஞர். பல துறைகளில் அவர் சிறந்து விளங்கினார். ஒரு பாடகராக, இசையமைப்பாளராக, நடிகராக, தயாரிப்பாளராக அவர் சிறந்து விளங்கினார். தெலுங்கு பாடல்களுக்கு கண்டசாலாவும், எஸ்பிபியும் இரு சிகரங்கள் என்று கூறலாம். எஸ்பிபி-யின் பெயர் வரலாற்றில் இடம்பிடித்து விட்டது’’ என்றார்.
கடும் எதிர்ப்பு: இந்நிலையில், எஸ்பிபியின் சிலை திறப்பு விழாவுக்கு தெலங்கானாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலங்கானாவாதி அமைப்பினர் பலர் சிலை திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆந்திராவை சேர்ந்த எஸ்பிபி, ஒரு காலகட்டத்தில் தெலங்கானா தாய் வாழ்த்தை பாட விரும்பவில்லை. ஆதலால் அவரின் சிலை திறப்பு விழா தெலங்கானா மண்ணில் நிகழ கூடாது என வலியுறுத்தி சிலை திறப்பு விழாவை தடுத்து முற்றுகை போராட்டம் செய்ய போவதாக அறிவித்தனர்.
முன்னதாக, இச்சிலையை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிதான் திறக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் கடைசி நிமிடத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வரவில்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.