ஸ்ரீஹரிகோட்டா: முன் எப்போதும் இல்லாத அதிக எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது, எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தரமான முறையில் வழங்குவதற்கானது.
இந்த செயற்கைக்கோள் இன்று காலை 8.55 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோ இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மிகப் பெரிய வணிகத் தொடர்பு செய்கைக்கோள் இது. இரண்டாவதாக, இந்திய மண்ணில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோட் இதுவாகும்.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது. அமெரிக்காவின் புளூபேர்ட் பளிாக்-2 எனும் இந்த செயற்கைக்கோளை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் LVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
இது இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை வலுப்படுத்தி உள்ளது. உலகலாவிய வணிக ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதி செய்துள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது. கடினமாக உழைத்து வரும் நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘‘விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது. இந்திய இளைஞர்களின் ஆற்றலால் நமது விண்வெளித் திட்டம் மேலும் மேம்பட்டதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது.
LVM3 ராக்கெட் நம்பகமான கனரக ஏவுதல் செயல்திறனை நிரூபித்துள்ள நிலையில், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளத்தை நாள் வலுப்படுத்தி வருகிறோம். வணிக ஏவுதல் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, உலகலாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்.
இந்த அதிகரித்த திறனும், தற்சார்புக்குக் கிடைத்துள்ள இந்த உத்வேகமும் வரும் தலைமுறையினருக்கு ஓர் அற்புத வரப்பிரசாதமாகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.