புதுடெல்லி: இந்திய மாலுமிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை தகவலைக் கூறி, ராகுல் காந்தியை சசி தரூர் அம்பலப்படுத்தியுள்ளார் என்று பாஜக கூறியுள்ளது.
ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் உத்தரவுகளை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த போது, இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்தார். இச்சம்பவத்துக்காக மன்னிப்பு கோரும்படி அமெரிக்காவிடம் கோரவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘‘ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த போது, இந்திய மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்த கவலையைத் தெரிவித்தார். வர்த்தகக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் பேசிய போது, இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்திய மாலுமிகள் தாக்கப்பட்ட விஷயத்தில் ராகுல் காந்தி கூறிய கருத்து தவறு என்பதை சசி தரூர் அம்பலப்படுத்திவிட்டார்.
நாட்டு நலனைப் பாதுகாக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி எப்போதும் முதல் நபராக உள்ளார். நாட்டு நலனுக்கு எதிராக பேசுவதில் ராகுல் காந்தி அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிடுவார்’’ என்று விமர்சித்துள்ளார்.