பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா (அடுத்தப்படம்) முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்
புதுடெல்லி: பாகிஸ்தானின் அணு சக்தி கட்டமைப்பை அமெரிக்கா அழிக்க முயன்றால், மும்பை, டெல்லி மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறியதாவது: டெல்லி மற்றும் மும்பை மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்படும் என்ற அப்துல் பாசித்தின் மிரட்டல், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களால் பாகிஸ்தான் இன்றும் அதிர்ச்சியில் இருப்பதைக் காட்டுகிறது.
அந்தத் தாக்குதலின் போது பாகிஸ்தான் தனது மன வலிமையை இழந்துவிட்டது. பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு. நாம் அதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த ஆண்டு, (பாகிஸ்தான் ராணுவ தளபதி) ஆசிம் முனீர் தேவைப்பட்டால் ஜாம் நகரில் (குஜராத்) உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்காவிடம் கூறியிருந்தார்.
இப்போது, அந்த நாட்டின் முன்னாள் தூதர் இத்தகைய மொழியைப் பயன்படுத்தியுள்ளார். இது தீவிரவாதம் அவர்களின் இயல்பிலேயே ஊறியிருப்பதைக்காட்டுகிறது. தீவிரவாதம் இல்லாமல் பாகிஸ்தானால் வாழ முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.