புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு தாதா போல பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கிறார். அவரது செயல்பாடுகள் பெண்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பாஜக எம்.பி.கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேநீர் அருந்தி பிஸ்கட் சாப்பிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறுகையில், “ராகுல் காந்தியைப் பார்க்கும் போது எங்களுக்கு (பெண்களுக்கு) மிகுந்த சங்கடமாக இருக்கிறது. அவர் ஒரு ‘தபோரி’ (தாதா) போல பொறுப்பற்ற முறையில் நாடாளுமன்றத்துக்கு வருகிறார். யாரைப் பார்த்தாலும் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுகிறார்.
யாராவது பேட்டி அளித்துக் கொண்டிருந்தால், அங்கு சென்று கூச்சலிட்டு இடையூறு செய்கிறார். ராகுல் தனது சகோதரி பிரியங்கா காந்தியின் கண்ணியமான நடத்தையைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
அதிகாரிகள் கண்டனம்: இது நாடாளுமன்ற மாண்பைக் குலைக்கும் செயல் எனக் கூறி, முன்னாள் டிஜிபி எஸ்.பி. வைத் தலைமையில் 84 முன்னாள் அதிகாரிகள், 116 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் 4 வழக்கறிஞர்கள் ராகுல் காந்திக்கு எதிராக பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.