பாஜக எம்எல்ஏ பிரீத்தம் லோதி
போபால்: ம.பி.யின் பிச்சோர் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரீத்தம் லோதி. இவரது மகன் தினேஷ் லோதி கடந்த 16-ல் சிவபுரி மாவட்டம் கரேரா பகுதியில் காரில் சென்றார்.
அப்போது அவரது கார் மோதி 5 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தினேஷ் லோதியை சிவபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் ஜாக்கர் வரவழைத்து, மீண்டும் கரேரா வர வேண்டாம் என எச்சரித்து அனுப்பினார். இதனால் எம்எல்ஏ பிரீத்தம் லோதி கோபம் அடைந்தார்.
“கரேரா என்ன உங்கள் அப்பாவுக்கு சொந்தமானதா ? எனது மகன் அங்கு செல்வான். துணிவிருந்தால் அவனை தடுத்துப் பார். எங்கள் பின்னணி என்ன வென்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்று பிரீத்தம் லோதி மிரட்டல் விடுத்தார். பிறகு இந்த விவகாரத்தில் "அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டை மாட்டு சாணத்தால் நிரப்புவேன்" என்றார்.
அவரது பேச்சுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரீத்தம் லோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் கூறுகையில், "நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நம்புகிறோம். அதே நேரம், அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பொது வெளியில் பேசும்போது கண்ணியத்தை கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.