தேஜஸ்வி யாதவ்
புதுடெல்லி: பிஹாரில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், ஆளும் என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த நிதிஷ் குமார், ராம்நாத் தாக்கூர், நிதின் நவீன் மற்றும் பாஜகவின் சிவம் குமார் ஆகியோர் சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில் எளிதாக வெற்றி பெற்றனர்.
ஆனால், ஐந்தாவது இடத்துக்கு என்டிஏ கூட்டணி ஆதரவுடன் ராஷ்டிரிய லோக் மஞ்ச் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும், ஆர்ஜேடி சார்பில் ஏ.டி.சிங்கும் போட்டியிட்டனர். இதில், குஷ்வாஹா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் புறக்கணிப்பு: வெற்றிக்கு தேவையான 41 வாக்குகளைப் பெற 35 எம்எல்ஏக்களைக் கொண்ட மகாபந்தன் கூட்டணி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் மாயாவதியின் ஆதரவை கடும் முயற்சியால் தேஜஸ்வி யாதவ் தக்கவைத்தார்.
இருப்பினும், கடைசி நேரத்தில் காங்கிரஸைச் சேர்ந்த மனோஜ் பிஸ்வாஸ், மனோகர் பிரசாத் சிங், சுரேந்திர குஷ்வாஹா ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வில்லை. அதேபோல் ஆர்ஜேடியை சேர்ந்த பைசல் ரஹ்மானும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் மாயமானார். இதனால் மகாபந்தன் வேட்பாளர் ஏ.டி.சிங் தோல்வியைத் தழுவினார்.
இதனால், ஆர்ஜேடி கட்சியினர் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் பிஹார் அரசியலில் மகாபந்தன் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.