டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். படம்: ஏஎப்பி
புதுடெல்லி: டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரகதி மைதான வளாகத்துக்குள் அமைந்துள்ள பாரத் மண்டபம் 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மண்டபம், சர்வதேச நிகழ்வுகளை நடத்தும் இந்தியாவின் திறனைப் பிரதிபலிக்கும் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் வகையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
‘பாரத் மண்டபம்’ என்ற பெயர், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அனுபவ மண்டபம்’ என்பதிலிருந்து மருவி வந்தது. பொதுமக்கள் விவாதம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கான ஆரம்பகால அமைப்புகளில் ஒன்றாக அனுபவ மண்டபம் கருதப்படுகிறது.
இந்த வளாகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை அமைந்துள்ளது. 8 உலோகக் கலவையான அஷ்டதாதுவால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலையை தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
பாரத் மண்டபத்தின் முக்கிய மாநாட்டு மையக் கட்டிடம் சங்கு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உணர்வு, ஆற்றல் மற்றும் மங்களகரமான தொடக்கத்தைக் குறிக்கிறது.
இதன் வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகளில் இந்திய நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சூரிய சக்தி, பூஜ்ஜியத்தில் இருந்து இஸ்ரோ வரையிலான இந்தியாவின் பயணம் மற்றும் பஞ்சபூதங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வடிவமைப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
உயர்மட்ட தூதரக சந்திப்புகளுக்கான முக்கிய மையமாக விளங்கும் பாரத் மண்டபத்தின் மாநாட்டு அரங்கில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அமர முடியும். பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் 2 நாட்களும் இங்கு முக்கிய இருதரப்பு, பலதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
‘அரங்கம் எண் 5’-ல் சர்வதேச ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 1,200 முதல் 1,400 பத்திரிகையாளர்கள் இங்கு திரண்டு மாநாடு குறித்த செய்திகளை சேகரித்து வருகின்றனர்.