புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நோயாளியின் சிகிச்சைக்கு பிறகு அதன் கட்டண விவரம், ஆவணங்களுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீடு பெற சமர்ப்பிக்கப்படுகிறது.
இது தொடர்பான புகார்களை தொடர்ந்து கடந்த ஜனவரி முதல், கட்டணங்களை தருவதற்கு முன் கடுமையான சரிபார்ப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும் ‘விரிவான சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளுக்கான மாநில முகமை' (எஸ்ஏசிஎச்எஸ்) இறங்கியது.
இதில் பல தனியார் மருத்துவமனைகள், சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கக்கூடிய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதித்து பல நாட்கள் சிகிச்சை அளித்ததாக காட்டியிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அத்தகைய சுமார் 300 மருத்துவமனைகளுக்கான கட்டணப் பரிமாற்றம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆயுஷ்மான் திட்டத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் 35 புதிய அளவு கோல்களைப் பூர்த்தி செய்து, அதற்கேற்ப கட்டணங்களைப் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, புதிய தரநிலைகளின் படி செயல்படாத மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 200 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுபோல், ஜனவரி முதல், சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை கொண்ட சுமார் 300 நோயாளிகளுக்கான கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் கள ஆய்வு மேற்கொள்ள எஸ்ஏசிஎச்எஸ் முடிவு செய்தது. இதில் தணிக்கைக் குழுக்கள் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் உரையாடியது. இதன் மூலம் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.